img 20260804 wa0033

எப்போதும் போல கபினி அணை முதலில் நிரம்பி, முதலாவதாக நமக்கு திறக்க வைத்து வயிற்றில் பால் வார்த்திருக்கிறது இயற்கை!

இந்த பதிவு போடும் போது 45,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது! லட்சம் கன அடியை தொட இறைஞ்சுவோம்!

காவிரியில் நமது உரிமை என்பது நமது உயிருக்கு சமம்தான், ஆனால் இந்த பதினைந்து நாட்களாக நம் அரசியல்வாதிகள் போட்ட சண்டையை, தண்ணீர் வர ஆரம்பித்த அடுத்த கணமே மறந்து விடப்போகிறார்களே?

சென்ற ஆண்டு இயற்கையின் கருணையால் ஏழு முறை மேட்டூர் அணை நிரம்பியது! 400டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் போனது! இது ஏதோ ஒரு வருடம் நடக்கும் கதை அல்ல!

உணர்ச்சிவசப்படாமல், உண்மையை கொஞ்சம் யோசிக்க வேண்டும்! கர்நாடகாவை விட தமிழ் நாட்டிற்கு மழை அதிகம்! 950 டிஎம்சி அளவுக்கு பெய்வதாக சொல்கிறார்கள்!

அத்தனை மழை நீரையும், மேட்டூரின் உபரித்தண்ணீரையும் சேமிக்க ஏதாவது யோசித்திருப்போமா?

மேட்டூருக்கு கீழே அணைகள் கட்டும் அளவுக்கு இயற்கை சூழல் இல்லாமல் இருக்கலாம்! ஆனால் ஏராளமான தடுப்பணைகள் காட்டியிருக்கலாம், இன்றைய நவீன தொழிற்நுட்பங்களை பயன்படுத்தி ஏரி குளங்களுக்கு தண்ணீர் கொண்டு போய் இருக்கலாம், புதிதாக நிறைய கால்வாய்கள் அமைத்து, சாகுபடி நிலங்களை அதிகமாக்கி இருக்கலாம்!

காமராஜர் காலத்திலிருந்தே ஏட்டளவில் இருக்கும் ராசிமணல் அணையை முயற்சி எடுத்து கட்டியிருக்கலாம் (மேட்டூர் அணைக்கு முன்பாகவே 65டிஎம்சி தண்ணீர் தேக்க முடியுமாம்), காவிரி -குண்டாறு நதியை இணைத்திருக்கலாம், பம்பிங் ஸ்டேசன்கள் மூலம் வசிஷ்டர் நதி, கோதையாறு போன்ற சிறிய ஆறுகளை இணைத்து எல்லா ஏரிகளையும் நிரப்பி இருக்கலாம்!

எந்த அரசாவது இதுவரை புதிதாக பதவியேற்றதும் நீர் நிலை ஆக்ரமிப்புகளை அகற்றுவது குறித்தோ, காணாமல் போன ஏரி குளங்களை மீட்பது குறித்தோ, வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்க என்ன வழி என்று அக்கறையோ ஆர்வமோ கொண்டுள்ளதா?

நானூறு டிஎம்சி தண்ணீரை வீணாக கடலில் கொட்டுவதை ஆட்சியாளர்கள், தங்கள் ஆட்சியின் அவமானமாக கருத வேண்டாமா?

கை மேல் பலனாக ஓட்டுகள் வராத எந்த திட்டத்தின் மேலும் அக்கறை இல்லாத அரசியல்வாதிகள், நமது பிள்ளைகளுக்கு துரோகம் செய்கிறார்கள் என்பதை எப்போதுதான் உணரப்போகிறோம்?

தண்ணீர் வர ஆரம்பித்து விட்டது, இனி எல்லா சத்தங்களும் அடங்கிப்போகும்! அடுத்த வறட்சியில் தூங்கி எழுவோம்!

“மலி புனல் பொருத மருது ஓங்கு படப்பை, ஒலி கதிர்க் கழனி, கழாஅர் முன்துறை, கலி கொள் சுற்றமொடு கரிகால் காண..”

காவிரியைப் பற்றி பேசுவதற்கே குறைந்த பட்ச அறிதல் கூட நமக்கெல்லாம் கிடையாதோ?

கர்நாடகா அளவிற்கு காவிரியை நாம் பயன்படுத்திக் கொள்ளவில்லை…
அந்த புனிதமான காவிரியை போற்றி பாதுகாக்கவும் தெரியவில்லை…
கவலையுடன்….

1. நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்…. கபினி, ஹேமாவதி, ஹேரங்கி அணைகள் மட்டுமல்ல… இன்னும் எத்தனை அணைகள் வேண்டுமானாலும் கர்நாடகம் கட்டிக்கொள்ளட்டும்… எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை… நாங்கள் உங்களைப்போல [காங்கிரஸ்காரர்கள்] நிலச்சுவான்தார்கள் அல்ல… பாட்டாளிகள்… கன்னடர்கள் எங்கள் திராவிட சகோதர்கள்… நாங்கள் அவர்களோடு பேசி தமிழகத்துக்கு தேவையான நீரைப்பெற்றுக்கொள்வோம்… நீங்கள் அதைப்பற்றி கவலைப்படவேண்டாம்…” என்று 06.03.1970 அன்று தமிழக சட்டசபையில் பொறுப்பில் இருந்தவர், எதிர்க்கட்சித்தலைவரான கருத்திருமன் அவர்களுக்கு அளித்த பதிலாம்… ]

2. இதனைத் தொடர்ந்து, காவேரி நதியின் உபநதிகளாகிய கபினி, ஹேமாவதி, ஹாரங்கி, சொர்ணவதி ஆகியவற்றில் பல்வேறு கட்டுமானப் பணிகளை மத்திய நீர் ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமலும், மத்திய திட்டக் குழுவின் ஒப்புதல் இல்லாமலும், தன்னிச்சையாக கர்நாடகம் துவக்கியது. கர்நாடக அரசின் இந்த அத்துமீறல்களை எல்லாம் கண்டு கொள்ளாமல் இருந்தவரும் அவர்தானாம்….

3. இனி தமிழக அரசை நம்பிப்பயனில்லை என்று காவிரி நதிநீர் விவசாயிகள் சங்கம் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 131-ன் கீழ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறது… பின்னர் வேறு வழியே இல்லாமல் தமிழக அரசும் உடன்சேர்ந்துகொள்கிறது… அந்த வழக்கை 04.08.1971 அன்று தமிழக பேரவை மற்றும் மேலவைக்கு தெரிவிக்காமலேயே தனக்குள்ள அரசியல் நெருக்கடி [ஒரு விசாரணை கமிஷனாம்] காரணமாக திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டதாக சொல்கிறார்கள்…

4. 18.2.1892-ஆம் ஆண்டு மெட்ராஸ் பிரசிடென்சி மற்றும் மைசூர் சமஸ்தானம் ஆகியவற்றுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் தான் காவேரி தொடர்பான முதல் ஒப்பந்தம் ஆகும். 1924-ஆம் ஆண்டு இரண்டாவது ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த இரண்டாவது ஒப்பந்தம் 50 ஆண்டு காலம் நடைமுறையில் இருக்கும் என்றும், மறு ஒப்பந்தம் 50 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்படுத்திக் கொள்வது என்றும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இந்த ஒப்பந்தம் 1974-ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட வேண்டும். ஆனால் அந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்கத் ஏதனாலோ தவறிவிட்டதாம்

5. தேவகவுடாவை பிரதமராக்க ஆதரவு கொடுத்ததால்… அந்த பதவியை அவர் நாட்டாமைக்கு கிடைத்த நரி வேலையைக்காட்டியது போல… நடுவர் மன்றத்தின் தலைவராக இருந்தவரை மாற்றி , கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்படக்கூடியவரை தலைவராக நியமித்தாராம்…. இதனால் நடுவர்மன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு கிடைக்கவேண்டிய பங்கு கணிசமாக குறைகிறது…

6. ஒருவழியாக நடுவர்மன்றத்தின் இறுதித்தீர்ப்பு 2007 ம் ஆண்டு வெளியாகிறது… ஆனால் 2011ம் ஆண்டுவரை மேற்படி தீர்ப்பு கெஜட்டில் வெளியிடப்படவில்லை…. பிளாக்மெயில் செய்து பசையுள்ள மந்திரி பதவிக‌ளைப்பெற்று இரண்டு ஜி என பல ஆயிரம் கோடி ஊழல் செய்வதில் பிசியாக இருந்தவர்களுக்கு காவிரியைப்பற்றி கவலைப்பட நேரமில்லையாம்…

காவிரிக்கரையில் பிறந்தவராக தம்மை புகழ்ந்து கொள்பவராக அவர் இருந்தும் , ஆரம்பம்முதல் கடைசி வரை தமிழகத்துக்கு எதிராகவே செயல்பட்டு , டெல்டா விவசாயத்தை முழுமையாக எடுக்க வாய்ப்பில்லாமல் காவிரி டெல்டா பகுதியை பாலைவனமாக்கியவருக்கு வைரவிழா மட்டுமல்ல… தினந்தோறும் விழாக்கள் எடுத்துக்கொண்டே இருக்கவேண்டும்….

ஒரே திருத்தம்… விழா எடுக்கவேண்டியவர்கள் தமிழர்கள் அல்ல…. கர்நாடகாவினர்…

நன்றி –

மாணிக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed