ayyar

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த 6 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுகவில் ஓரங்கட்டப்படும் பிராமணர்கள்?

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் களம் முழுமையாக சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இன்றுடன் வேட்புமனுதாக்கல் முடிவடைய உள்ள நிலையில், நாளை முதல் வேட்பாளர்கள் முழு வீச்சில் பரப்புரையில் ஈடுபட தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 35 ஆண்டுகளில் முதல்முறையாக மாநில சட்டமன்ற தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் ஒரு வேட்பாளர் கூட களமிறக்கப்படவில்லை. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் ஓய்வுபெற்ற டிஜிபி நடராஜன் அதிமுக சார்பில் களமிறக்கப்பட்டார். ஆனால், 2026 சட்டமன்ற தேர்தலில் ஒரு பிராமணர் கூட வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை. பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த ஜெயலலிதா காலத்தில் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கப்பட்டது.

பாஜக கூட கண்டுக்கல…

அதிமுக கூட்டணியில் 27 தொகுதிகளை பெற்ற பாஜக கூட இந்த முறை ஒரே ஒரு பிராமணரை கூட வேட்பாளராக களமிறக்கவில்லை. தமிழ்நாடு பிராமணர் சங்கம் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த பிறகும் கூட, அந்த சமூகம் சார்பில் இருந்து யாரும் வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. கே.டி. ராகவன் மற்றும் எச். ராஜா ஆகியோரின் பெயர்கள் வேட்பாளர் பட்டியலுக்காக பரிசீலிக்கப்பட்டாலும், வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. கே.டி. ராகவன் சில சர்ச்சைகளில் சிக்கியதாலும், எச். ராஜா உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
திமுக கூட்டணி எப்படி?

திமுக 170-க்கும் அதிகமான தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் களமிறங்கினாலும், ஒரு பிராமணரை கூட வேட்பாளராக அறிவிக்கவில்லை. அந்த கூட்டணியில் 28 தொகுதிகளை பெற்றுள்ள தேசிய கட்சியான காங்கிரசும் பிராமணர்களுக்கு ஒரு தொகுதியை கூட ஒதுக்கவில்லை. இதனை ஆராய்ந்தால், தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, காங்கிரஸ் மற்றும் மத்தியில் ஆளும், பிராமணர்களுக்கு ஆதரவான கட்சியாக கூறப்படும் பாஜக கூட, 2026 சட்டமன்ற தேர்தலில் அந்த சமூகத்தினருக்கு வாய்ப்பளிக்காமல் மறுத்துள்ளது.

தவெக, நாதக எப்படி?
அதேநேரம், இந்த சட்டமன்ற தேர்தலில் கணிசமாக வாக்குகளை பிரிக்குமென எதிர்பார்க்கப்படும் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 2 தொகுதிகளிலும், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி 6 இடங்களிலும் பிராமணர் சமூக வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. அந்த சமூகத்திற்கு குறிப்பிட்ட அளவிலான வாக்கு வங்கியை கொண்டுள்ள மயிலாப்பூர் மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதிகளை குறிவைத்து வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளது.
பிராமணர் சமூகம் அதிருப்தி…
எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் எச்.வி. ஹண்டே என்பவர் அமைச்சரவையிலேயே இடம்பெற்று இருந்தார். ஆனால், இன்று அரசியல் கட்சிகளால் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் பெரும்பாலானோர் ஒபிசி பிரிவினராக உள்ளனர். குறிப்பாக தனித்தொகுதிகளை தவிர மற்ற தொகுதிகளில் கவுண்டர், தேவர், வன்னியர், நாயுடு மற்றும் நாடார் சமூகத்தினர் முக்கியத்துவம் பெற்றுள்ளனர்.

பல தசாப்தங்களாக பிராமணர்களின் ஆதரவை பெற்று வந்த அதிமுக, இந்த முறை எங்களுக்கான பிரதிநிதித்துவத்தை மறுத்து அநீதி இழைத்துள்ளதாக பிராமண சமூகத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர். பாஜகவில் சீட் ஒதுக்கப்படாவிட்டாலும், உயர்மட்ட தலைவர் பதவிகளில் பிராமண சமூகத்தின் தாக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த நிலை அதிமுகவில் இல்லை. திமுக கமல்ஹாசனை மாநிலங்களவைக்கு தேர்வு செய்தாலும், அவர் தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதனால், தமிழ்நாட்டு அரசியலில் பிராமணர்களின் தாக்கம் முற்றிலுமாக மறைகிறதோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed