சமயபுரம் உண்டியல்கள் திறப்பு; கோடி கோடியாக பணம், நகைகளை காணிக்கையாக வழங்கிய பக்தர்கள்!
அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மனை கோவில். இக்கோவிலுக்கு வந்து வணங்கினால் நினைத்தது நடக்கும், குடும்பம் செழிக்கும், தொழில் அபிவிருத்தி அடையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பஸ், வேன், கார் உள்ளிட்ட வாகனங்களிலும், பாதயாத்திரையாகவும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் வருவார்கள். அப்படி வரும் பக்தர்கள் கோவிலில் உள்ள உண்டியல்கள் மூலம் தங்கள் காணிக்கைகளை செலுத்துவார்கள். பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை கோவில் நிர்வாகம் சார்பாக மாதமிருமுறை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, இந்த மாதம் முதல் முறையாக நேற்று கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில்,காணிக்கையாக ரூ.1 கோடியே 33 லட்சத்து 67 ஆயிரத்து 737 ரூபாய் ரொக்கமும், 2 கிலோ 842 கிராம் தங்கமும், 4 கிலோ 383 கிராம் வெள்ளியும்,113 அயல் நாட்டு பணம் மற்றும் 990 அயல் நாட்டு நாணயங்கள் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.