வடலூரில் டாஸ்மாக் பணியாளர்கள் கூட்டுக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம், ஆகஸ்ட் 28, முதல் தொடர் டாஸ்மாக் கடை,முழு கடையடைப்புப்போராட்டம்
கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், அனைத்து டாஸ்மாக் பணியாளர்கள் கூட்டுக்குழு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஒன்பது சங்கங்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில்
23 ஆண்டுகளுக்கு மேலாகத் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் டாஸ்மாக் பணியாளர்கள் அனைவரையும், வரவுள்ள மானியக் கோரிக்கையில் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, நாளை (ஆக. 28) முதல் அனைத்து சங்கங்கள் மூலமாகத் தொடர் முழு கடையடைப்புப் போராட்டம் நடத்துவது
கடை வாடகை, மின் கட்டணம், சரக்கு கூலி உள்ளிட்ட எந்தவொரு நிர்வாகச் செலவையும் ஊழியர்கள் மீது திணிக்காமல், அதற்கான மாற்று வழியை நிர்வாகமே செயல்படுத்த வேண்டும், உயிரைக் கொல்லும் காலி பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்தை, எவ்வித இலக்கும் (சதவிகிதமும்) இன்றி முழுமையாக மாற்று வழியில் செயல்படுத்த வேண்டும்,கடலூர் மாவட்டத்தில் உள்ள பணியாளர்கள் யார் மீதாவது நிர்வாகம் பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டால், அனைத்துப் பணியாளர்களும் ஒன்றிணைந்து மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன
இக்கூட்டத்தில், தொ.மு.ச மாவட்டச் செயலாளர் சங்கர், அண்ணா தொழிற்சங்க நிர்வாகி கல்யாணசுந்தரம், தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில நிர்வாகி பெரியசாமி, அரசுப் பணியாளர் சங்க நிர்வாகி பாலமுருகன், விற்பனையாளர் நலச்சங்க நிர்வாகி உதயசங்கர், பாட்டாளி தொழிற்சங்க நிர்வாகி ராஜமாணிக்கம், தமிழக வாழ்வுரிமைச் சங்க நிர்வாகி மனோகர், ஏ.ஐ.டி.யு.சி நிர்வாகி சரவணன், மேற்பார்வையாளர் நலச்சங்க நிர்வாகி அச்சுதன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளைக் கூட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர்களான ஜெயராமன், பாலசுப்பிரமணியன் மற்றும் சுரேஷ்பாபு ஆகியோர் செய்திருந்தனர்.