“வீராணம் ஏரியில்” 2-ம் உலகப்போரின்போது ஹிட்லர் பயன்படுத்திய நச்சுகள் கலந்திருப்பதாக அதிர்ச்சி தகவல்!
சென்னையின் குடிநீர் ஆதாரமாகவும், கடலூர் மாவட்டத்தின் பாசன ஆதாரமாகவும் திகழும் வீராணம் ஏரியில், இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லரால் பேரழிவை ஏற்படுத்த பயன்படுத்தப்பட்ட நச்சுகள் கலந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. சென்னை பல்கலைக்கழகமும், மாநில கல்லூரியும் இணைந்து நடத்திய ஆய்வில் நீலப்பச்சை பாசி எனும் பாக்டீரியா அதிக அளவில் கலந்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் உருவாகும் காவிரி நீர் தான் வீராணம் ஏரிக்கு வருகிறது.கர்நாடகத்தில் கலக்கும் சாக்கடை கழிவுகள், மேட்டூரில் சேரும் வேதிப்பொருள் கழிவுகள், நொய்யலில் சங்கமாகும் சாயப்பட்டறை கழிவுகள், காவிரி பாசன மாவட்டங்களில் இணையும் உரக்கழிவுகள் ஆகியவை தான் வீராணம் ஏரி நீரின் சீரழிவுக்கு காரணம். இவற்றைத் தடுக்கவேண்டியது அரசின் கடமை. ஆனால், அக்கடமையை நிறைவேற்றுவதில் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டதன் விளைவைத் தான் வீராணம் ஏரி நீரை பயன்படுத்துபவர்கள் அனுபவித்து வருகின்றனர். இதற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். மக்களுக்கு நோய்களை ஏற்படுத்தும் இந்த வகை நச்சுகள் வீராணம் ஏரியில் கலப்பதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்காதது கண்டிக்கத்தக்கது.தமிழ்நாட்டில் அனைத்து ஆறுகள், ஏரி, குளங்கள் என எல்லா நீர்நிலைகளும் மாசுபட்டிருக்கின்றன. ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளை தூய்மைப்படுத்த வேண்டியதன் தேவையை அரசு ஒப்புக்கொண்டிருக்கும் போதிலும், நிதிப்பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் அதற்கான திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை.வீராணம் ஏரியில் கலந்துள்ள நச்சுகளை அழிக்கவேண்டியது முதன்மை கடமையாகும். அதற்காக காவிரி ஆற்றை தூய்மைப்படுத்துவதற்கான நடந்தாய் வாழி காவிரி என்ற பெயரிலான திட்டத்தை தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும். வீராணம் ஏரியின் ஓரத்தில் கோரைப்புற்களை வளர்த்தால் நீலப்பச்சை பாசி அழிந்துவிடும் என்பதால் கோரைப்புல் வளர்க்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.