குறிஞ்சிப்பாடி மாரியம்மன் கோவில் திருவிழாவில் முதியவரின் மனைவியிடம் 5 பவுன் செயின் மாயம்
க
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருள்மிகு புத்து மாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் ஆடி செடல் திருவிழாவில், மூதாட்டி பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் செயின் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரிய கண்ணாடி கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் (73), அவரது மனைவி மீனாட்சி (68) ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை மதியம் சுமார் 12 மணி அளவில் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசிக்கச் சென்றனர். அப்போது கோவில் நுழைவாயிலில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் அடையாளம் தெரியாத சுமார் 45 ,50, வயது மதிக்கத்தக்க மெலிதான சந்தன கலர் சட்டையும் வெள்ளை வேட்டியும் அணிந்திருந்த ஆண் மற்றும் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஆகியோர் அவர்கள் மீது வேகமாக இடித்துச் சென்றதால், கணவன்–மனைவி இருவரும் கூட்டத்தில் பிரிந்தனர்.
பின்னர் இருவரும் மீண்டும் சந்தித்து, கூட்ட நெரிசல் காரணமாக கருவறைக்குள் செல்லாமல் வேம்பாயி அம்மன் சன்னதியில் வழிபட்டு வீடு திரும்பினர்.
வீட்டில் சென்றபின் கழுத்தில் அணிந்திருந்த நகைகளை கழற்ற முயன்றபோது, தாலியுடன் சேர்த்து அணிந்திருந்த சுமார் 5 பவுன் தங்கச் செயின் காணாமல் போனது தெரியவந்தது. மற்றொரு 2½ பவுன் தங்கச் செயின் மட்டும் இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து ராமலிங்கம், தனது மனைவியுடன் குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தார் காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவல்துறையினர், கோவில் வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொள்கிறோம் உங்கள் முகவரியையும் கைபேசி எண்ணையும் கொடுத்து விட்டு செல்லுங்கள் என்று இரு முதியவர்களையும் அனுப்பி வைத்துள்ளனர். இருவரும் பறிபோன தங்க செயின் திரும்பி கிடைக்குமோ கிடைக்காதோ என சோகத்தில் வீட்டிற்கு சென்றுள்ளனர். கோவிலில் உள்ளே செல்லும்போது எங்களை இடித்து சென்ற அந்த நபர்கள் மீது தான் சந்தேகம் இருக்கிறது என்று கூறுகின்றனர்.
திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் திரண்டுள்ள நிலையில், இந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
க